Thursday, September 30, 2010

ஆன்மீக கேள்வி பதில் -2



நைட் ஷிப்ட் பணியாளர்கள் காயகல்பம், உடற்பயிற்சி, தவம் இவற்றையெல்லாம் எவ்வாறு செய்து வருவது?

1. தவம், தற்சோதனை இவைகளை, மனம் எப்பொழுதெல்லாம் நடு மனத்திலிருந்து [7-14] புற மனதுக்கு [14-40] நகர்கின்றதோ அப்பொழுது செய்வதே நல்லது. மனம் அமைதியிலிருந்து இயக்கத்துக்கு வரும் போது, அலையியக்கம் சற்றே குறைவாய் இருக்கும். இந்த நேரமே சிறந்த நேரம். [அதாவது தூங்கி எழுந்தவுடன் செய்வது நல்லது]

2. காயகல்பம், நேரம் சார்ந்த பயிற்சி என்று சொல்லி விட இயலாது. ஆனால், நேர இடைவெளி சார்ந்த ஒன்று. எனவே உணவு நேரம் சார்ந்த, காயகல்ப நேர இடைவெளியை மட்டும் மதித்து வந்தால் போதுமானது. காயகல்பம் உடலின் செரிமானத்தை பாதிக்க வல்ல ஒன்று, நேரத்தில் முறை தவறினால். இதையும் நினைவில் கொள்க. மேலும் சரியான நேரத்தில் உணவு உண்ணாது போனால், ஐந்தில் முறை தவறியதாய் போய்விடும்.

3. நமது உடற்பயிற்சி உடல்-மனம் இணைந்த ஓர் பயிற்சி. உடல் சார்ந்த பயிற்சி என்பதால், உணவு செரித்தல் நேரம் சார்ந்து செய்ய வேண்டும். மனம் சார்ந்த பயிற்சி என்பதால், எப்பொழுதெல்லாம் மனம் நடு மனத்திலிருந்து [7-14] புற மனதுக்கு [14-40] நகர்கின்றதோ அப்பொழுது செய்வதே நல்லது. [அதாவது தூங்கி எழுந்தவுடன்].

நமது பயிற்சி முயற்சிகள் கர்ம யோக நிலைக்கு ஒரு போதும் ஊறு விளைவிக்காது. விளைவிக்கா வண்ணம் பயிற்சி முயற்சிகளி ஈடுபட்டு நல்வாழ்வு வாழ்க!

இரவில் வேலைக்குச் செல்லுதலை தவிர்த்து விடலாமா? [அதனால் பல உடற்சிக்கல்கள் தோன்றுவது போல் உள்ளது]

என்று ஓரறிவுடைய சிறு தாவரம், தான் வாழ சூரிய ஒளியை ஆதாரமாய்க் கொண்டதோ, அன்றே சூரியன் சார்ந்த வாழ்க்கை முறை இப்புவியில் ஓர் ஆதாரமாகி விட்டது. ஆறு அறிவு வரை அந்த தாவரம் பயணித்து வந்து, இன்று மனிதனாய் நின்று, இயற்கையை தன்னிஷ்டம் போல் வளைக்க முயல்கின்றது.

இரவில் அளவு முறை உறக்கம், பகலில் அளவு முறை உழைப்பு என்று வாழ்தல், இயற்கையோடு இணக்கமாகும் அடிப்படை வழி.

பரிணாமம், இயல்பூக்கம், செயல் விளைவு எனும் இயற்கைச் செயல் முறைகளை நாம் இங்கே குறிப்பிடுவது மிக அவசியமாகின்றது. பெரும்பாலான விலங்குகள், நான்கு கால்களைக் கொண்டு நடந்து தம் இயற்கைத் தேவைகளான உணவு, உறைவிடம், இனப்பெருக்கம் செய்கையிலே, பரிணாமத் தொடரிலே குரங்கு எனும் நமது மூதாதையர் வருகின்றார். அவருக்கு உணவு மரத்தின் மேலே, உறைவிடத்துக்குக் கூட மரக் கிளை பாதுகாப்பானதொன்று [சிங்கம், புலி போன்ற விலங்குண்ணும் உயிரினங்களிடமிருந்து பாதுகாப்பு]. இந்த அடிப்படைத் தேவைகள் தந்த மன உந்துதலாலே, மரமேர முயற்சி செய்து செய்து, இறுதியாய் வெற்றியும் கண்டு, மரமேறுதல் அதன் பழக்கமாய்ப் போகின்றது. இந்த பழக்கம், முன்னிரு கால்களை அடிக்கடி மேலே உயர்த்த வைக்கின்றது. குரங்கின் பரிணாமத் தொடரிலே, எதோ ஒரு வம்சத்திலே, ஒரு குட்டி, கால்கள் மேல் எழும்பிய நிலையில் பிறந்து விட, முன்னிரு கால்கள் கைகளாய் மாறுதலில் வந்து நிற்கின்றது. அதாவது தன், முன்னிரு கால்களை, அடிக்கடி, மேலுயர்த்தும் பழக்கம் கருமையத்தில் பதிவாகி, சூழ் நிலைக் காரணிகளைச் சார்ந்து, எதோ ஒரு சந்ததியில் அப்பழக்கப் பதிவு, உடலினில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இதே போன்று தான், கரப்பான் எனும் பூச்சி, தன் உணவை இரவில் மற்ற உயிரிகள் நடமாடா நிலையில் ஈட்டி ஈட்டிப் பழக, அப்பழக்கப் பதிவே, பின்னாளில், இரவுப்பழக்கமுடைய பூச்சியாய் அதை மாற்றிவிடுகின்றது. பரிணாமம் என்பது, இயற்கைத் தேவைகளைச் சார்ந்தே அமைகின்றது.

இவ்வாறாக பரிணாமத் தொடரில், சீராக பயணித்து வருகையில், ஒரு உயிரியின் சீவகாந்தக் களம், தன்னில் திடீர் மாற்றங்களையும் காண்பதுண்டு. அதனுடைய ஏதோ ஒரு குறிப்பிட்ட இயல்பு திடீரென ஊக்கம் பெற்றுவிடும், காந்தக் களத்தில் விளைந்த திடீர்த் தர மாற்றத்தால். இது இயல்பூக்கம். எடுத்துக்காட்டாக, பிளத்தல் [asexual reproduction] எனும் பழக்கம் பரிணாமத் தொடரின் இயல்பு, இந்த இயல்பு ஏதோ ஒரு காரணியால் ஊக்கமடைந்து, கருவிலே ஒரு கரு இரண்டாய் பிளந்து விடுதல், இரட்டையர் பிறத்தலுக்கு காரணமாகின்றது. பரிணாமத் தொடரில் ஓர் இயல்பு [பழக்கம்], தன்னிச்சையாய் ஊக்கமடைந்து விடுதல், இயல்பூக்கம்.

எந்த ஒரு பரிணாம, இயல்பூக்க மாற்றமும் செயல் விளைவை எதிர் கொண்டே தான் ஆக வேண்டும். எடுத்துக்காட்டாக, உணவு ஈட்ட வெளவால், இரவில் விழித்திருக்கலாம், எனினும் பகலில் செயல் விளைவாய் மூளை செல்களில் ஆற்றல் குறைதல், அதை உறக்கம் எனும் நிலைக்கு உட்படுத்தவே செய்யும். செயல் - விளைவின்றி எந்த ஒரு பரிணாம, இயல்பூக்க நிகழ்வும் இப்பிரபஞ்சத்தில் கிடையாது.

இத்தகைய இயற்கையின் அறிவைக் காணும் போது, ஒருவேளை உணவு ஈட்டும் இயற்கைத் தேவை சார்ந்து, மனிதர்க்கு இரவில் தொழில் புரியும் நிலை வருமாயின், அதையும் இயற்கை பரிணாமம், இயல்பூக்கம், செயல் விளைவு என்ற மூன்றையும் கொண்டு அணுகவே செய்யும், எனும் எண்ணம் நமது மனதில் உறுதியாய் பூக்கின்றது.

பரிணாமம் - இயல்பூக்கம் - செயல் விளைவு இதுவே இயற்கையின் செயல்முறை.

பிரம்ம ஞானப் பட்டம் வந்த காரணம் யாது?

ஒரு இரயில் பெட்டியில் ஏறுகின்றீர்கள், முதல் வகுப்புப் பயணியிடம் கேட்கின்றீர்கள். எங்க போறீங்க? என்று. அவர் போகுமிடத்தின் பெயர் சொல்லுகின்றார். எங்கே இருந்து போறீங்க? அவர் கிளம்பிய இடத்தைச் சொல்கின்றார். கடைசி வகுப்புப் பயணியிடம் போகின்றீர்கள். அவரிடமும் அதே கேள்வி, அவர் விடை சொல்ல வரும் போது, அவரிடம் போய், கடைசி வகுப்புல தான போற, உனக்கு கிளம்புமிடம், போகுமிடம் தெரிஞ்சா என்ன? தெரியாட்டி என்ன? என்று சொன்னால்? நமது சமுதாயத்தின் பெரும் பகுதி 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இப்படித்தான் இருந்தது. ஒரு பிராமணரிடம் போய், தங்கள் பிறவி எங்கு செல்கின்றது? என்று கேட்டால், அவர் சொல்வார் பிரம்மம் நோக்கி என்று. உங்கள் பிறவி எங்கே துவங்கியது என்று கேட்டால் மிகச் சரியாய்ச் சொல்வார். பிரம்மத்திலிருந்து என்று. கடைசி வகுப்புப் பயணியாம், ஒரு 19ஆம் நூற்றாண்டு சூத்திரரை எடுத்துக் கொள்ளுங்கள். அவரிடம் போய்க் கேட்டுப் பாருங்கள், உங்கள் பிறவி துவங்கியது எங்கு என்று? அவர் சொல்வார், அது தெரிஞ்சி என்ன செய்யப் போறேன் என்று. எங்கு போகின்றது உங்கள் பிறவி என்று கேட்டால், அது மட்டும் தெரிஞ்சி என்ன பண்ணப் போறேன் என்று தான் விடை வரும். பிரம்ம ஞானம் என்பது புனிதம் எனும் பெயரில் பஜனை பாடி, மந்திரம் ஓதி, மூச்சை விட்டு விட்டு வயமாய் இழுக்கும் ஒரு குழுவினருக்கு மட்டுமே சொந்தமாய்ப் போனது, சமுதாயத்தின் இழிவு.

Revolution என்று சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். வேதாத்திரியம் எனும் ஓர் Revolution அதை அனைவருக்கும் எளிமைப்படுத்தி பொதுவுடமையாக்கல் முறைக்கு உட்படுத்தியது. பொதுவுடமை ஆக்கி விட்டோம், எப்படி அச்செய்தியை வெளிக் கொணர்வது? மஹான் கண்டு பிடித்தார் ஒரு எளிய முறையை. யாரை எல்லாம், தாழ்ந்தோரில்லை என்று அழைக்க விரும்பினோமோ அவர்களை எல்லாம் காந்தி 'ஹரி சனம்' அழைத்தது போன்று, எவர்க்கெல்லாம் பிரம்ம ஞானம் மறுக்கப் பட்டிருந்ததோ, மறைக்கப் பட்டிருந்ததோ, அவர்களுக்கு பிரம்மத்தின் சுவை தந்து, அவர்களை 'பிரம்ம ஞானி' என்று வழங்கினார். பிரம்ம ஞானம் பொதுவுடமை என்று உணர்த்தவே நாம் எல்லாம் பிரம்ம ஞானி என்று அழைக்கப் படலானோம்.

ஒரு மத குரு கேட்டார், எல்லாரையும் பிரம்ம ஞானி ஆக்குகின்றீர்களாமே என்று? மஹான் எளிமையாய்ச் சொன்னார். அது ஒண்ணுமில்லீங்க. எங்க இருந்து வந்தாங்க, எங்க போறாங்க என்று சொல்லிக் கொடுக்குறேன் அவ்வளவு தான் என்று.

மேலும், மஹான் system-rules என்பவைகளில் மிக அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே தான் இந்த பட்டச் சான்றிதழ் வழங்கும் வழக்கத்தையும் கொணர்ந்தார். மஹான் வழங்கும் பிரம்ம ஞானப் பயிற்சி முடிவில் தரப்படுவது பிரம்ம ஞானச் சான்றிதழ் அன்று - அது பிரம்ம ஞான பயிற்சிச் சான்றிதழ். அதாவது பயிற்சி பெற்றதற்கான சான்று (evidence) + இதழ். அவ்வளவே.

பிரம்ம ஞானப் பட்டம் வந்த விதம் சமுதாயப் புரட்சிக்காகவே! ஆன்மீகத்தை சமுதாயத்தின் ஒவ்வோர் அங்கமும் ஏற்கவே.

[பின் குறிப்பு: இதையும் நாம் நினைவில் கொள்வது நன்று. பிரம்ம ஞானி என்பது நிலையா? பட்டமா? விடை எளியது தான். நிலை என்றுணர்ந்தோர் பட்டத்தை கண்டு கொள்வதில்லை. பட்டம் தரும் தன் முனைப்பில் சிக்கியோர் நிலையை அடைவதில்லை.]

மூலம் : https://sites.google.com/site/vethathirianspace/literaturecollection-போர்தேபூக்

நன்றி அருண்.

வாழ்க வளமுடன்

Leia Mais…

Monday, September 27, 2010

ஆன்மீக கேள்வி பதில் -1




Faith எனும் நிலையிலேயே சில ஆன்மீகப் பாதையில் சீடர்கள் தங்கிவிடுகின்றாரே?

குரு மேல் கொள்ளும் faith, செயல் விளைவாய் நம்மை தவ நிலையில் உயர்த்திக் கொண்டே தான் இருக்கும். இருப்பினும், faith என்ற துவக்க நிலையிலிருந்து understanding எனும் அடுத்த நிலை நோக்கி குரு நிலை உதவியால் நம்மை நாம் நகர்த்திக் கொண்டே தான் இருக்க வேண்டும். பின் தவ நாட்டம் சார்ந்து understanding எனும் நிலை தானாகவே realization எனும் உயர் நிலைக்குள் வழுக்கி உட்புகுந்து விடும். இது தான் யதார்த்தமான ஓர் ஆன்மீகப் பாதை.

ஒரு பென்சில் இருக்கின்றது, அது மழுங்கிய முனையோடு இருக்கின்றது. மழுங்கிய முனை என்றாவது கூராய் மாறும் என்றெண்ணி நம்பிக்கையோடு காத்திருப்பதை நாம் faith என்று ஏற்பதில்லை அல்லவா? ஒரு sharpner ஐ எடுத்துச் சீவ வேண்டியது தானே என்று அந்த பென்சிலின் இயக்கத்தை understand பண்ணிக் கொள்வதையே நாம் விரும்புகின்றோம். அல்லவா? இது போலத்தான் ஆக்கினை சரியாய் வரவில்லை எனில் அதை நாம் faith மட்டும் கொண்டு அணுகுவதை விட ஆசிரியர் கற்றுத்தந்த understanding கொண்டு அணுகுவதயே ஆதரிக்கின்றோம். அதாவது காந்தக்கள திணிவு மிகுந்த தவக் கூட இடத்தில் ஆக்கினை எளிதாய் வந்து விடும், எனும் understanding உம் இங்கு அவசியம். கூட்டுத் தவத்தில் அமர்ந்து faith எனும் புறமன உந்துதலையும் சற்றே தந்து தந்து ஆக்கினைப் புள்ளியை கவனிக்கத் துவங்கும் போது, அங்கே நம் எண்ணத்தின் திணிவாலும், காந்தக் கள இயல்பாலும், ஆக்கினை எளிதில் வந்து விடுகின்றது. ஆக்கினை வந்த பின், புற மன faith க்கு வேலை இல்லாது போய் விடுகின்றது. காந்தம் நன்கு சேகரிக்கப் பட்ட நிலையில், உயிர் உணர்தல் என்பது உயிர்க்கலத்தல் எனும் realization க்குள்ளும் வழுவி விழுந்து விடுகின்றது. இப்படி faith - understandng - realization எனும் படி நிலைகளில் பயணிப்பது மிக யதார்த்தமான ஒரு ஆன்மீக நிகழ்வு. அல்லவா? குரு உயர்வு, என்றும் நம்மை உயர்த்தி பிறவிப்பயனை நல்கும். வாழ்க வளமுடன்.

சீவ காந்தக் குறுக்கு நிகழுமிடத்தில் வேதாத்திரிய அறிவியல் படி என்ன நிகழ்கின்றது?

1. சீவ காந்தக் களத்தில் குறுக்கு ஏற்பட்ட இடத்தில், காந்தம் தன் சூக்கும சரீரச் சுழலை நிறைவு செய்ய இயலாது, வெளியேறி வான் காந்தத்தில் கரைந்து போய் விடும்[Magnetism bleeds out of its energy field, and disperses in the universal magnetism].

2. + / - என்று ஏதும் காந்த ஓட்டத்தில் இயற்கையில் கிடையாது - துருவத்தன்மை என்பது காந்தம் சுழன்றோடும் திசையையே குறிக்கின்றது. காந்தக் குறுக்கு வருமிடத்தில், ஆற்றல் ஓட்டம் தடை படும், ஆனால் தன்னிச்சையாக திசை மாற இயலாது.

ஒரு சிறு எடுத்துக்காட்டு, சிறுவர்கள் நீர்ப்பரப்பில் கல் எறிந்து விளையாடுவதைக் கண்டிருப்பீர்கள். கல் மூழ்காது, ஆனால் பரப்பில் மட்டும் உராய்ந்து தெறித்து ஓடும். அங்கே கூர்ந்து கவனித்தால் ஓர் நிகழ்வு புலப்படும், அது நீர்ப்பரப்பை முட்டிய இடத்திலெல்லாம் விரிவலைகள் தோன்றும், விரிவலைகள் எல்லாத் திசைகளிலும் விரவும். இது போன்றது தான் மின்னோட்டமும். எலெக்ட் ரானின் எனும் ஓர் பரம அணுவின் ஆற்றல் ஓர் அணுக்கூட்டத்துக்குள் தாவித் தாவி கல் நீர்ப்பரப்பில் தெறித்து ஓடுவதைப் போன்று ஓடும் போது, அந்த அணுக்கூட்டத்தின் காந்த அளவில் [யோகான் களத்தில்] வரும் மாறுபாடு, விரிவலைகளாக விரவி அருகாமையில் உள்ள வான் காந்தக் களத்துள் கரைகின்றன [இது வட்ட வளையம் போன்று எல்லாத் திசைகளிலும் விரவும் ஓர் நிகழ்வு]. கல் ஓடிய திசை மின்னோட்டம் என்றும், நீரலைகள் விரவிய எல்லை வரை, மின் காந்தக் களம் என்று அறிவியல் பெயரிட்டுள்ளது. [பிளம்மிங் இடது/வலது கை விதிகள், கல் ஓடிய திசை, நீரலைகள் விரவும் திசைக்கு செங்குத்தாய் அமையும் என்றும், இவ்விரு விசைகளின் விளைவாய், அணுக்கூட்டம் மற்றோர் செங்குத்துத் திசையில் நகரும் என்றும் சொல்கின்றது.]

நரம்பு மண்டலம் என்பது கூட மேற்சொன்ன மின்சுற்று போன்று தான். ஓர் இடத்தில் மின் குறுக்கு ஏற்பட்டு விரயமாகும் காந்தத்தின் அளவிற்கேற்ப, அங்கே நரம்பு முனைகளில் மின்காந்த அலைகள் தூண்டப்பட்டு, அவை பின் மூளை வரை நகர்கின்றன. தூண்டப்பட்ட மின் காந்த அலையின் ஆற்றலே, வலியை, தொடு உணர்வினின்று வேறுபடுத்துகின்றது மூளை செல்களில். அவ்வளவே.

ருட்த்ராக்ஷம் ஆன்மீகத்தில் அவசியமானதா? அவசியமென்று சில ஆன்மீகப் பாதைகள் சொல்லுகின்றனவே?

அணிகலன் என்பது கற்காலத்திலே, தான் வென்ற விலங்குகளின் எலும்புகளை, நகங்களை, இன்ன பிற உறுப்புகளை தான் போராடி வென்றதின் அடையாளமாய் தனக்கும், தன் துணைக்கும் கழுத்தில், கையில் இடுவதிலிருந்து தோன்றியது. இது மதிப்பின் அடையாளமாய் பின் மாற்றமடையத் துவங்கியது [கற்கால வாசிகளிடையே தலைமைப் பொறுப்பேற்றிருப்பவர் அதிக அணிகலங்களை அணிந்தவராய் இருப்பார், அதாவது நிறைய விலங்குகளோடு போராடி அவற்றையெல்லாம் வென்றவர் என்பதின் அடையாளம்]. பின்னாளில் மனிதர்கள் பெரும் குழுமங்களாக வாழ்ந்த நிலையில் [civilizations like mohanjatharo, harappa etc] , அபூர்வ உலோகங்கள் [தங்கம், வைரம், வைடூரியம் போன்றவை] கண்டறியப் பட்டபோது, கற்கால அணிகலங்கள், பொன்னாபரணமாக மாறிற்று.

இக்கால கட்டத்திலே தான் குண்டலினி யோகிகளுக்கு அணிகலன் களை பரிசாய்த் தருவது வழக்கமாகியிருக்க வேண்டும். அவர், தம் எண்ணத்தின் ஆற்றல் கொண்டு, மன்னரது கோள்களின் சஞ்சாரம், அன்னியப் படையெடுப்புகள் போன்றவற்றை முன்பே எடுத்துச் சொல்லும் திறன் பெற்றவராய் இருந்திருப்பார். அதற்குப் பரிசாய் அணிகலன் கள் அளிக்கப்பட்டிருக்கும். பொருள் மீது கொள்ளும் ஆசை, தம் ஆன்மீக முன்னேற்றத்துக்குத் தடை என்பதை உணர்ந்த அக்கால குண்டலினி யோகிகள், அணிகலனாய் இயற்கை மூலிகை விதைகளையே ஏற்றிருப்பர், பயன் படுத்தியிருப்பர். முதன் முதலில் தோன்றிய ருத்ராக்ஷம், ஒரு மருத்துவ வகை விதையால் தான் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். மணிமாலை மட்டுமல்ல, அன்னாள் குண்டலினி யோகிகள் அணிந்த அனைத்துமே இயற்கைப் [மூலிகை] பொருட்கள் தாம், அவ்வணிகளின் காந்தம், எப்போதும் அவர் தம் சீவ காந்தக் களத்தோடு உயிர்க்கலப்பு நிலையில் இருந்தமையால், அதையே அவர்கள் சுவாசித்து, அவசியப் படின் உணவாய், மருந்தாய் பயன் படுத்தியதாலும், அவர்கள் நோய் நொடியின்றி வாழ அவ்வணிகள் உதவி செய்தன. பின்னாளில், இதுவே குண்டலினி யோகிகளின் அடையாளமாய் மாறத் துவங்கியது.

குண்டலினி யோகிகள் அகப் பயிற்சிக்கு இலக்கணம் வகுத்த போது, தாரணை எனும் பயிற்சி, தவத்துக்கு ஆதாரமாய் விளங்கியதை உணர்ந்தனர். அந்த நிலையிலே தான், தமது அணிகலனையே ஒரு தவ பயிற்சியாளர் தாரணைக்கு பயன்படுத்தியிருக்க வேண்டும். கண்ணைமூடி மணிமாலையிலுள்ள மணிகளை எண்ணுதல், மனதை புறத்திலிருந்து பிரிக்கும் ஓர் நல்லதோர் துவக்க நிலை [தாரணை] ஆன்மீகப் பயிற்சியாய் கருதப் பட்டது. இப்பழக்கம் இன்னும் வழக்கில் உள்ளது. பின்னாளில் அதுவே வழக்கமாகி, புனிதமாய் கருதப் படத் துவங்கியது. மேலும், சில ஞானிகள் கிரகங்களிலிருந்து வரும் காந்த அலைகள் தம் அலை நீளம் சார்ந்து, சில உலோகங்களோடு இணக்கமான அதிர்வுகளையே ஏற்படுத்துவதை உணர்ந்து அவ்வுலோகங்களையே எப்போதும் தம் அணி செய்யப்பயன்படுத்தினர். இன்று சில அபூர்வ வகை உலோகங்கள் [முத்து, பவளம் இன்ன பிற] வான் சாத்திரம் எனும் பெயரில், நடுத்தர மக்களின் தலையில் கட்டப் படுவது அப்பெரும் ஞானிகளின் கண்டுபிடிப்புகளை நாம் முறைகேடாக பயன் படுத்த எத்தனித்ததால் தான்.

பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்குப் போகும் போது அங்குள்ள பழங்கால பரண் மீதே, அதில் நிறைந்து கிடைக்கும் பொருள் மீதே குழந்தைகளின் கவனம் செல்லுதல் இயல்பு. அது போன்று, ஆன்மீகத்திலும் குழந்தையாக இருக்கும் போது, இது போன்று பழங்கால பிராணயாமம், வாசியோகம், ருத்ராக்க்ஷம், மந்திரம் என்ற பரண் பொருட்கள் எல்லாம் நம் கவனத்தை ஈர்க்கத்தான் செய்யும். பரண் பொருட்களை உருட்டிப் போட்டு ஆராயாது, அவைகள் ஏன் பரணுக்குப் போனது என்று மட்டும் சிந்தித்து, குரு தந்த கருவி மட்டும் போதுமெனும் நிறைவை தவத்தில் பெற்று, நிறை நிலை நோக்கி நகர்க. குழந்தையாகவே ஆன்மீகத்தில் இருந்து, குழந்தையாகவே ஆன்மீக வாழ்வு முழுவதையும் கழித்து, உடல் இறக்கும் நிலையில் ஏன் ஆன்மீகம் நம்மில் சிறக்கவில்லை என்று சிந்தித்து ஒரு பயனுமில்லை.

ஆன்மீகத்துக்கு புற அடையாளம் ஏதும் கிடையாது, அப்படியேதும் அவசியப்படவுமில்லை. ருத்ராஷமாயினும் சரி, தோளில் போட்ட மஞ்சள் துணியாயினும் சரி, அது ஒருவரின் ஆன்மீகத்தின் அடையாளமாய் மாறவே இயலாது. ஒரு சீவன் முக்தருக்கு அடையாளம் புறத்தே அவசியமுமில்லை, அவர்கள் தம் அணிகளை அடையாளப் பெருளாய் ஒரு போதும் கருதுவதுமில்லை.

வாழ்க வளமுடன்.



கருமையத்தை தவத்தில் உணர இயலுமா?

இயலுமே. மூலாதாரத்தவத்தில் நீங்கள் அழுத்தமாய், சுழல் உணர்வாய், வெப்பமாய் உணர்வது கரு மையமே.

"எவ்வொன்று அணுவெனும் உயிராகி,
அவ்வுயிரின் படர்கையாம் பிரணவமாகி

அவ்வுயிரே பின் பூதங்கள் ஐந்துமாய்
பிரணவமே பின் ஆற்றல் அனைத்துமாய்

சீவனில் வித்தாய் அவ்வுயிரே விளங்கிப்பின்
வித்தின் ஆற்றலுமாய் பிரணவம் நின்று

பிரணவத் தன்மாற்றம் மனமாம் மறையாய்
பிரணவக் களமையமதே பேரறிவாம் ஆன்மா

வந்த ஓர் வழியதை உணர்த்தும் விதமாய்
ஆன்மாவின் இருப்பிடம் ஆற்றல் குவிவாம்

அவ்வாற்றல் குவிவது பிரணவத் தன் மாற்றமாய்
அழுத்தம், வெப்பம், எனப் பல வடிவில் உணர்வாய்
மையமிருத்தல் மூலாதாரத் தவமெனும் பேற்றில்."


என் நண்பர் ஒருவர் சரணாகதியின் மீது அதிகப் பற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு தீரா வியாதியும் ஒன்று உள்ளது, அவரை குரு நிலையை சரண் அடையச் சொல்லலாமா?

இந்தச் சரணாகதி எனும் சொல் மிக வலுவானது. எடுத்துக்காட்டாய், எந்த ஒரு சிக்கலுமே 1. உடனடியாய் தீர்க்க முயல்தல், 2. தள்ளி வைத்து பொறுமை காட்டி வருதல், 3. அலட்சியம் செய்து விடுதல், 4. மன அமைதியோடி கூடிய வலுவோடு ஏற்றுக் கழித்தல் எனும் 4 வகைகளில் அடங்கவல்லது. சில நேரங்களில் கணிப்பொறி துறையில் நீங்கள் இப்படி ஒரு சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த code ஐ, நமது கணிப்பொறியிலும் இயங்கச் செய்யலாம், server side இலும் இயங்கச் செய்யலாம் என்று சொல்வார்கள். அதாவது server side script, client side script, என்று கொள்வோம். இந்த சரணாகதி என்பது server side script மாதிரி. நான்கு சிக்கல் தீர்க்கும் முறைகளைச் சொன்னோமல்லவா? அதை அப்படியே குருவிடம் தந்து அவர் காலடியைச் சரணடைந்து மௌனத்தில், தவத்தில் நிலைத்து விடுதல். குரு இச்சிக்கலை உடனடியாய் தீர்க்க முடிவெடுத்தால், நாம் மன்றம் போகும் போது, தன் எண்ணத்தின் ஆற்றலைக் கொண்டு, ஒரு தலை சிறந்த மருத்துவரை, பொறுப்பாசிரியர் மூலம், அன்று மன்றத்துக்கு அழைத்து, தங்களிடம் சாதாரணமாய் பேசச் செய்து, பின், இருவரின் கருமையத்திலும் இறையாற்றல் உறைந்து, தானாகவே தங்கள் சிக்கலை அவருக்கு தெரியப் படுத்தி, தானும் காயகல்பம் கொண்டு குணப்படுத்தி, மருத்துவர் மருந்தையும் உண்ண வைத்து, சிக்கல் தீர்த்து விடுவார். அத்துணை வலிமை வாய்ந்தது இந்த சரணாகதி நிலை. இந்த மருத்துவரிடம் போகும் script ஐ client side ல், அதாவது தங்கள் மனதில் இயங்கச் செய்வதில் உள்ள ஓர் சிக்கல் என்னவெனில், தவறான மருத்துவர்களை, தெரியாமல் போய்ப் பார்த்து, பணம் விரயமாக வாய்ப்புண்டு. இதுதான் விஷயம். மேலும், சிக்கல் தீரும் வரை, அதீத மனோபலமும் [3], அதைப் பற்றி பிறர் ஏதும் குறை சொல்லி விடினும் கூட அவற்றை எல்லாம் அலட்சியப் படுத்தும்[2] மனப்பாங்கும் சரணாகதியில் தானாய்க் கிட்டுபவன.

பின் குறிப்பு: சரணாகதியை துவக்குவது எப்படி? மௌனம் எனும் பயிற்சியமைப்பை சரியாய் கற்றுக் கொள்ளுங்கள். அளவு முறைக்குட்பட்ட உணவு, உழைப்பு, உறக்கம், தேவையான எண்ணம், உடலுறவு, இதற்கு எஞ்சிய நேரமனைத்திலும் மௌனத்தில் இருந்து வாருங்கள். சரணாகதியின் துவக்கம் இதுவே. இதைத் தவிர வேறு ஆன்மீகப் பாதைகளில் தரப் படும் இலக்கணங்களை தயை கூர்ந்து ஏற்க வேண்டாம்.

விளங்காது உணர்தல் வேதாத்திரியத்தில் சாத்தியமா?

சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்றையும் சேர்த்து தரப்படும் மருந்தில் சுக்கை மட்டும் பிரித்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. அது போல, புரிதலும், உணர்தலும் இணைந்தே வேதாத்திரியம் எனும் வடிவில் நமக்கெல்லாம் கிடைத்திருக்கின்றது. இணைந்து கிடைத்த வேதாத்திரிய மருந்துண்டு, பதிவு போக்கி நல் வாழ்வு வாழ்வோம். அதாவது, ஏதாவது ஒரு மன்றத்திலே, எங்காவது, யாரேனும், புரிதலையும், உணர்தலையும் தனித்தனியாய் பிரித்து ஒன்றை மட்டும் வகுப்பில், கற்றுத் தந்த அனுபவம் உண்டா தங்களுக்கு? இணைந்தே கிட்டும் இவ்விரண்டும், ஒன்று மற்றொன்றுக்குத் துணை, இரண்டையும் ஒன்றாய் உண்டோர் அடைவார் 'விளங்கி உணர்தல்' எனும் ஓர் உயர் நிலை. விளங்காது உணர்தலை, உணரா விளங்குதலை, தப்பியும் தந்துவிடாது வேதாத்திரியம்.

மூலம் : https://sites.google.com/site/vethathirianspace/literaturecollection-போர்தேபூக்

நன்றி அருண்.

வாழ்க வளமுடன்

Leia Mais…

Ads by Adbrite

Your Ad Here